தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தீவிர நிர்வாகியான ஆர்.கே சுரேஷ் சமீபத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியானது. இவர் பாஜக கட்சியில் கலை பிரிவு மாநில நிர்வாகியாக இருக்கிறார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே பலர் கைதான நிலையில் தற்போது ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக ஆர்.கே சுரேஷ் வெளிநாட்டில் 2 மாதங்களாக தலைமறைவாக இருக்கிறாராம்.

மேலும் சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா நிதி நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் செயல்பட்டது. இந்த நிறுவனம் எங்கள் நிர்வாகத்தில் முதலீடு செய்தால் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 1 லட்சம் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதலீடு தொகையையும் வட்டியையும் கொடுக்காத ஆருத்ரா நிறுவனம் ரூ. 2,438 கோடியை சுருட்டியது. இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் நடிகர் ஆர்.கே சுரேஷ் கைது செய்யப்பட்டால் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.