தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து கண்டன பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக அரசின் அலட்சியத்தால் தாம்பரத்தில் ஒரு அப்பாவியின் உயிர் பலி! இந்த மனிதாபிமானமற்ற ஆட்சி முடிவுக்கு வருவதற்குள் இன்னும் எத்தனை உயிர் பலிகளை தமிழகம் தர வேண்டும்?

சென்னை அருகே தாம்பரத்தில் கடைக்குச் சென்ற அஸ்வின் என்ற 35 வயது இளைஞர் மின்சாரக் கம்பத்தில் இருந்த ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த நான்காண்டுகளாக முறையாக பராமரிப்பின்றி கிடக்கும் மின் கம்பங்களால் ஏற்படும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. ஆளும்  அரசின் அலட்சியத்தால் இதுபோன்ற அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம்.

அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றது. எனவே, இன்னும் சில வாரங்களில் பருவ மழைக்காலம் துவங்க இருப்பதால், தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சரி செய்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென முதல்வர் திரு.ஸ்டாலின்  அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.