ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில், வாகனம் ஒன்று வேகமாக ஒரு நாயை மோத முயற்சித்து, பின்னர் கர்ப்பமான மற்றொரு நாயை மோதிக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு குடியிருப்பு பகுதியின் குறுகிய சாலை வழியாக வந்த வாகனம், முதலில் ஓர் நாயை மோத முயற்சி செய்தது. ஆனால் அந்த நாய் தப்பிய பிறகு, அருகில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பமான நாயை நேரடியாக மோதியது. கர்ப்பமான நாயை வாகனம் மோதியபின், அருகிலிருந்த மற்ற நாய்கள் அதனை சுற்றி சத்தமிட்டு அலறின.

முதலில் தப்பிய நாய் அந்த வாகனை துரத்திக்கொண்டு ஓடியது. அப்பகுதி மக்கள் நாய்களின் அலறலால் வெளியே வந்தனர். அவர்கள் உடனடியாக கர்ப்பமான நாயின் உடலை எடுத்து இறுதி சடங்கு செய்து, நாயை மோதிய வாகன டிரைவரை கைது செய்ய போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் புகாரை பதிவு செய்ததும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பிக்-அப் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால், அதனை ஓட்டிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.  வாகனம் வேகமாக நாய்களை மோதியது தெளிவாக சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளியை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் மக்கள் மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.