கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து பணிக்காக சென்றிருந்தார். அப்போது வனப்பகுதியில் அவர் நின்று கொண்டிருந்த போது திடீரென காட்டெருமை ஒன்று வெளியேறியது. அது அங்கு நின்று கொண்டிருந்த அசோக் குமாரை முட்டி தூக்கி வீசியதால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அவருடைய சத்தத்தை கேட்டு அங்கிருந்த வனப் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் அவரை உடனடியாக சீலியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.