
கேரளாவிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. அதன்படி செனாடு பகுதியிலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அஞ்சல் நடைமுறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்துகள் அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். இந்நிலையில் அரசு பள்ளி ஒன்றில் பயிலும் 4-ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரேயா சபின் என்பவர் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்திக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.
பின்னர் அவர் அதனை மறந்து விட்ட நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு ஸ்ரேயா பெயரில் அவர் படிக்கும் பள்ளிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தை பிரியங்கா காந்தி எம். பி தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ளார். ஸ்ரேயாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் அந்த கடிதத்தை மாணவ மாணவிகள் மத்தியில் ஸ்ரேயாவிடம் ஒப்படைத்துள்ளார். மாணவியின் வாழ்த்து கடிதத்திற்கு மதிப்பு அளித்து பிரியங்கா காந்தி பதில் கடிதம் அனுப்பிய சம்பவம் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பலரை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.