அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில், ராட்சத ராட்டினம் உடைந்த விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ராட்சத ராட்டினம் எதிர்பாராதவிதமாக நடுப்பகுதியில் உடைந்து கீழே விழுந்தது. இதில் ராட்டினத்தில் இருந்தவர்கள் நிலைகுலைந்து கீழே தூக்கி வீசப்பட்டனர்.

 

விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பு நிலவியது. இந்த கோர விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவர், ராட்டினத்தின் உடைந்த பகுதி தலையில் பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

பொருட்காட்சி மேளாவில் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.