பெண்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்தவர்களும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை அறிந்ததும் மதுரையில் இன்று கண்ணகி போல் சிலம்பு ஏந்தி போராடிய குஷ்பு எங்கே போனார்? என்று அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குஷ்பு கூறியதாவது, ஒரு பெண் அமைச்சராக இருந்தும் பெண்களின் நியாயத்துக்காக குரல் கொடுக்காததும், அவர்கள் பாதுகாப்புக்கு பக்கபலமாக நிற்காததும் வருத்தம் அளிக்கின்றது. ஒரு பெண் பாதிக்கப்பட்டால் இந்த கட்சி, அந்த கட்சி, இந்த ஆட்சி, அந்த ஆட்சி என்று பிரித்து பேசுவது ஏன்?. பெண்களை பெண்களாக பார்க்க தயங்கும் அமைச்சர்களின் மனநிலை மிகவும் வெட்கக்கேடானது.

பாதிக்கப்பட்டிருப்பது பெண் அதனால் முதலில் கட்சி, ஆட்சி என்ற வட்டத்துக்குள் இருந்து வெளியே வரவேண்டும். பாலியல் குற்றச்சாட்டில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கைதானாலும் நாங்கள் அவர்களை பாதுகாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரை திமுக சேர்ந்தவர்கள் காப்பாற்ற போராடுவது ஏன்? இன்னும் போராடிக் கொண்டிருப்பது யார்?. அரசு நிலத்தை ஆட்டைய போட்டு பங்களா கட்டி இருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நாங்கள் கேட்பது ஒன்றுதான். சம்பந்தப்பட்ட அந்த சார் யார் என்பதுதான் அதைக் கூட வெளியே சொல்ல தயங்குகின்றனர்.

சிறப்பு விசாரணை குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டோம். ஆனால் அதைக் கூட ஏற்க தயங்குகின்றது. சிலம்பெயந்தி கண்ணகியைப் போல போராடியதாகவும் இப்போது சிலம்பு காணாமல் போய்விட்டதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். கண்ணகி நீதி கேட்டதும் அநீதி நடந்ததை அறிந்து பாண்டிய மன்னன் உயிரையே விட்டார். ஆனால் இந்த ஆட்சியில் நீதி இல்லை. நடந்த அநீதிக்காக வருத்தப்படாதவர்களிடம் நீதி எப்படி கிடைக்கும் கண்ணகியாக வாழ போராட வேண்டிய ஆட்சியில் சிலம்பு காணாமல் போவது ஒன்று ஆச்சரியமில்லை என்ற கூறினார்.