திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த
2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும் அங்கிருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.

இதைத்தொடர்ந்து மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலில் மரகதலிங்கம் காணாமல் போனதை கண்ட அதிர்ச்சடைந்தார். உடனடியாக கோயில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன ரூ. 2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றதாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கினை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மரகதலிங்கத்தை திருடிய வைத்தியலிங்கம், பச்சி ராஜா மற்றும் மெர்லின் சகாயராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நேற்று முன்தினம்  சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பச்சி ராஜா மற்றும் மெர்லின் சகாயராஜ் என்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமாகவும், வைத்தியலிங்கம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 1500 அபராதமாக செலுத்தும் படி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தக்க தண்டனை பெற்றுக் கொடுத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.