முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தமராக்கி அருகே உள்ள குமாரப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு பிடிப்பது குறித்து சந்தோஷ் தரப்பினருக்கும், புதுப்பட்டியை சேர்ந்த மதன் தரப்பினருக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து முன் விரோதம் காரணமாக கல்லூரி முடிந்து வெளியே நின்று கொண்டிருந்த சந்தோஷை  புதுப்பட்டியை  சேர்ந்த மதன்(20), வெற்றிவேல்(20) மற்றும் ஐந்து பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். மேலும் உருட்டு கட்டையால் சந்தோஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்த சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் மதன், வெற்றிவேல் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.