ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 43), வெல்டிங் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி வீனவானி. இவர்களுக்கு பிரகதீஷ் (வயது 5) மற்றும் தினேஷ் (வயது 1) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று, தினேஷ் வீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் தலைகீழாக விழுந்ததாக கூறப்படுகிறது.

சில நிமிடங்களில் குழந்தை காணாமல் போனதை கவனித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக தேடத் தொடங்கினர். குழந்தை பக்கெட்டில் விழுந்து தலைகீழாக கிடப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்தவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தினேஷுக்கு 20 நாட்களுக்கு முன்பே பிறந்த நாள் கொண்டாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்பட்ட இந்த துயரமான சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.