மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் தொடக்கமாக நடைபெற்ற ‘ஆக்மன்’ (வருகை) ஊர்வலத்தின் போது எதிர்பாராத விதமாக ராட்சத விநாயகர் சிலை சரிந்து விழுந்த விபத்தில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் புகழ்பெற்ற ‘புலேேஷ்வர் சா ராஜா’  பொது விநாயகர் மண்டலத்தின் 22 அடி உயர ராட்சத சிலை, பைக்குல்லா பகுதியிலிருந்து ஊர்வலமாகப் புலேேஷ்வர் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. சனிக்கிழமை நள்ளிரவு நெருங்கும் வேளையில் ஊர்வலம் வந்துகொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பிரம்மாண்டமான சிலை சமநிலையை இழந்து முன்னால் இருந்த கூட்டத்தின் மீது பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது.

சிலையை தாங்கிய இரும்புச் சட்டத்தின் வெல்டிங் திடீரென அறுந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திடீர் விபட்டால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக இறங்கினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மண்டலத் தலைவர் சங்கீத் நெவ்ஷே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய 5 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 5 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்; அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.