சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ( கார், ஓட்டுநர் மற்றும் பராமரிப்புத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், “தங்களுக்கும் இருசக்கர வாகனம் (பைக்) வழங்க வேண்டும்” எனக் கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ₹75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, எதிர்க்கட்சியான திமுக, ” இந்த கார் சலுகை தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தேவையில்லை” என அதிகாரப்பூர்வமாக மறுத்து அறிவித்தது.
இந்தச் சூழலில், “கிராமப்புறங்களில் தினமும் களப்பணியாற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கே வாகன வசதி மிகவும் அவசியமானது” என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
#WATCH | “எம்.எல்.ஏ.க்களை விட அதிகளவில் மக்கள் பணி செய்வது ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான். எங்களுக்கு குறைந்தபட்சம் இருசக்கர வாகனமாவது வழங்க வேண்டும்..”
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு.#SunNews | #CarForMLAs | #Vijay |… pic.twitter.com/PILkqnvGO2
— Sun News (@sunnewstamil) August 21, 2026
கிராமப்புற மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் தினமும் சென்று வரவும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அரசு சார்பில் இருசக்கர வாகனம் (பைக்) வழங்க வேண்டும். வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காகத் தகுந்த மாதாந்திர தொகையை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் அரசு, கடைக்கோடி கிராமங்களில் நேரடியாகச் செயல்படும் ஊராட்சி தலைவர்களுக்கும் குறைந்தபட்ச வாகன வசதியைச் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கான கார் சலுகை குறித்து காரசார விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ‘பைக்’ கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களை விட தாங்கள்தான் அதிக நேரம் மக்கள் பணியில் ஈடுபடுவதாகவும் எங்களுக்கு பைக் வேண்டும் எனவும் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
