ஜெர்மன் கால்பந்து அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம், பாயெர்ன் முனிச்  அணி ரசிகர்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. ஆர்பி லீப்சிக் அணிக்கு எதிரான பிரீ-சீசன் ஆட்டத்தில் அபாரமாக கோல் அடித்து அசத்திய நட்சத்திர வீரர் ஜமால் முசியாலகா திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்து மயங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாயெர்ன் முனிச் அணிக்காக விளையாடி வரும் 23 வயதான ஜெர்மன் சர்வதேச வீரர் முசியாலகா, லீப்சிக் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கோல் அடித்து அணியை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் அவர் திடீரென நிலைதடுமாறித் திகைத்துப் போய் மயங்கி விழுந்தார். அன்று நிலவிய கடும் வெயில் காரணமாக அவருக்குத் தலைசுற்றல் மற்றும் இரத்த ஓட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடனடியாக அதிர்ச்சியடைந்த சக வீரர் இஸ்மாயில் சைப்ரி , ஜோசுவா கிம்மிக்  மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் முசியாலகா தனது சொந்த கால்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியது சற்று நிம்மதியைத் தந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான கால் காயம் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக விளையாடாமல் ஒதுங்கியிருந்த முசியாலகா, தற்போதுதான் அணிக்குத் திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தது ரசிகர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

எனினும், பாயெர்ன் முனிச் நிர்வாகம் உடனடியாக வெளியிட்டுள்ள ஆறுதல் செய்தியில், முசியாலகாவிற்கு நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. புதிய சீசனுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், சில நாட்கள் முழுமையான ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பாயெர்ன் முனிச் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும், முசியாலகாவின் திடீர் மயக்கம் அந்த வெற்றியின் மகிழ்ச்சியைக் சற்று மங்கச் செய்துள்ளது.