வணிக உலகிலும் முதலீட்டுத் துறையிலும் குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்ட நினைக்கும் பேராசையை முதலீடாக வைத்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், ‘ஈஏஒய் ஆரிஜின்’ என்ற தனியார் நிறுவனம், அதிக வட்டி மற்றும் அபரிமிதமான லாபம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு நடத்திய மாபெரும் நிதி மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் அரங்கேறிய இந்த பிரம்மாண்ட மோசடி சம்பவம், முதலீட்டாளர்கள் மற்றும் வணிக வட்டாரங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நிறுவனத்தின் பின்னணியில் இருந்து இயங்கிய முக்கிய நபர்களையும், இந்த பிரம்மாண்ட பணப் பரிவர்த்தனைகளுக்குக் காரணமான மோசடி கும்பலையும் அதிரடியாகச் சுற்றி வளைத்து, தற்போது 4 பேரைக் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.

போலியான வாக்குறுதிகளை நம்பி தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து தவித்து வந்த ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு, காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ள மும்பை போலீசார், மோசடி செய்யப்பட்ட 30 கோடி ரூபாய் பணம் எங்கு மாற்றப்பட்டது மற்றும் இதில் வேறு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனால் “கண்ணை மூடிக்கொண்டு எந்தவொரு தனியார் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களிலும் பணத்தை முதலீடு செய்யக் கூடாது” எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவலத்துறை, முறையான அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.