கண்களின் அழகைக் கூட்டுவதற்காகப் பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண் மை, சில சமயங்களில் கடுமையான கண் பாதிப்புகளையும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிலான தீவிரமான சூழலையும் ஏற்படுத்தக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலைச் சரும நல மற்றும் கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் காஜல் அழகு சாதனப் பொருட்களில் முன்னணியில் இருந்தாலும், அதைத் தவறான முறையில் பயன்படுத்துவதும் தரம் குறைந்த ரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் காஜலை உபயோகிப்பதும் கண்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தாக முடிகிறது.

கண்களின் உட்புறக் விளிம்பில் காஜல் அப்ளை செய்யும்போது, அங்கே இருக்கும் நுண்ணிய சுரப்பிகளின் துவாரங்கள் அடைபட அதிக வாய்ப்புள்ளது. இதனால் கண்களில் கட்டி ஏற்படுதல், தீவிரமான அரிப்பு, அலர்ஜி, கண் வறட்சி மற்றும் தொற்றுப் பிரச்சைனைகள் உருவாகின்றன.

சில சமயங்களில் இந்தச் சுரப்பி அடைப்புகள் தீவிரமடைந்து, கட்டிகள் கரையாமல் போவதால் அதை அகற்றுவதற்குச் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. மேலும் சந்தைகளில் கிடைக்கும் சில காஜல்களில் ஈயம் மற்றும் பிற தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதால், அவை பார்வைத் திறனையே பாதிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன.

எனவே, காஜல் பயன்படுத்தும் போது சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். எப்போதும் தரமான, ரசாயனம் அற்ற மற்றும் சரும மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட காஜலை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

கண்களின் உட்புற விளிம்பில் வைப்பதைத் தவிர்த்து, வெளிப்புற இமை முடியின் ஓரத்தில் லேசாகப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. அதேபோல், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் காஜலை முழுமையாகக் கழுவி அகற்றுவதும், பிறரின் காஜலைத் தான் பயன்படுத்துவதையோ அல்லது தன் காஜலை பிறருக்குத் தருவதையோ முற்றிலும் தவிர்ப்பதும் கண்களைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகளாகும்.

“>