திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால், அந்தப் பந்தத்தின் புனிதத்தை காற்றில் பறக்கவிட்டு, சட்டத்தையும், பெற்ற பிள்ளையையும் ஏமாற்றிவிட்டு ஒரு கணவன் செய்த துரோகம், உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, தன் கணவன் இரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை ஒரு மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசம் ஹர்டோய் நகரின் ஆஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் சர்மா. இவருக்கும் திஷா சர்மா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களின் அன்பின் அடையாளமாக ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில், புயல் வீசத் தொடங்கியதால் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களது விவாகரத்து மற்றும் குடும்பத் தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. சட்டம் இன்னும் இவர்களை பிரிக்காத நிலையில், பிரசாந்த் சர்மாவின் மனதில் வேறு ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தன் கணவன் தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு, அதே வீட்டில் குடும்பம் நடத்துகிறான் என்ற அதிர்ச்சித் தகவல் திஷா சர்மாவின் காதுகளுக்கு எட்டியது. பதறியடித்துக்கொண்டு சனிக்கிழமை மாலை தன் மாமியார் வீட்டிற்குச் சென்றார் திஷா. ஆனால், அங்கிருந்தவர்கள் மழுப்பலாகப் பேசி உண்மையை மறைக்க முயன்றனர்.

தன் கணவனின் கண்களில் தெரிந்த துரோகத்தையும், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலையும் வைத்து திஷா ஒரு முடிவுக்கு வந்தார். அன்று இரவு வீட்டிற்குச் செல்லாமல், அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் தங்கி விடிய விடியக் காத்திருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில், யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டின் மொட்டை மாடி வழியாக திஷா அதிரடியாக உள்ளே புகுந்தார். வீட்டின் ஒவ்வொரு அறையாகத் தேடினார். ஒரு குறிப்பிட்ட அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று தேடியபோது, அங்கு கண்ட காட்சி அவரது இதயத்தை சுக்குநூறாக உடைத்தது.

அங்கு ஒரு பெண், கட்டிலுக்கு அடியில் பயந்து நடுங்கியபடி ஒளிந்து கொண்டிருந்தாள். அவள்தான் தன் கணவன் ரகசியமாகத் திருமணம் செய்து அழைத்து வந்த இரண்டாவது மனைவி என்பதை திஷா உணர்ந்தார். சட்டப்பூர்வமாகத் தனக்கு விவாகரத்து தராத கணவன், இன்னொரு பெண்ணுடன் வாழும் துரோகத்தை அந்தத் தாயால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த பெண்ணை தைரியமாக வெளியே இழுத்து வந்த திஷா, அவளை நேராக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவத்தைக் காண அந்த வீட்டின் முன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி சஞ்சய் தியாகி கூறுகையில், தம்பதியினருக்கு இடையேயான குடும்பத் தகராறு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், சட்டத்தின் விதிகளையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற நினைத்த கணவனின் இந்தச் செயல், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றாலும், அந்த ஏழு வயதுக் குழந்தையின் எதிர்காலமும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மன வேதனையும் என்று தீரும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.