சென்னை:
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே எமோஷனலான வீடியோக்களுக்குத் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்களைப் பார்க்கக் காத்திருந்த சிறுமியின் கண்ணீரும், அதற்குப் போட்டியாக அதிமுகவினர் பகிர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமியின் பாசக் காணொளியும் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“விஜய் மாமா டாட்டா காட்டல!” – சாலையில் கதறி அழுத சிறுமி!
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக நெஞ்சை உலுக்கும் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில், பிஞ்சு விரல்களால் ஒரு அழகான பூ மாலையைத் தாங்கியபடி, தன் தந்தையுடன் சாலையோரம் ஆவலோடு காத்திருந்தார் ஒரு குட்டிச் சிறுமி.
ஆனால், அந்தப் பகுதியைக் கடந்த முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் அவரது சொகுசுக் கார், எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. அந்த வேகத்தில், காரின் உள்ளே இருந்த முதலமைச்சர் விஜய்யால் அந்தச் சிறுமியை கவனிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று கூறப்பட்டாலும், அந்தப் பிஞ்சு நெஞ்சம் அதைத் தாங்கிக் கொள்ளவில்லை.
”விஜய் மாமாவை நான் பார்க்கவே இல்லை… அவர் எனக்கு டாட்டா கூட காட்டல!” என்று கையில் மாலையோடு அந்தச் சிறுமி விம்மி விம்மி அழுத காட்சி, பார்ப்பவர் நெஞ்சை உருகச் செய்தது.
”இங்கே பாருங்கள் எங்களது எடப்பாடியாரை!” – அதிமுகவினர் காட்டிய வீடியோ!
சிறுமியின் அழுகை வீடியோ இணையத்தில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், அதிமுகவினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோ ஒன்றை இதனுடன் ஒப்பிட்டுப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அந்தக் காணொளியில், எடப்பாடியார் அவர்கள் சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, தன்னைத் தேடி மக்கள் திரண்டிருப்பதைப் பார்த்ததும், தனது சொகுசு வாகனத்தை உடனே நிறுத்தச் சொல்கிறார். காரில் இருந்து கீழே இறங்கி வந்த அவர், பாதுகாப்பு வளையங்களை எல்லாம் கடந்து, அங்கிருந்த சாமானிய மக்களோடு மிகவும் எளிமையாகவும் சகஜமாகவும் உரையாடுகிறார்.
சினிமா கவர்ச்சி முதல்வருக்கும் மக்களின் மனங்களை வென்றெடுத்த முதல்வருக்கும் இடையே உள்ள வேறுபாடு!!
pic.twitter.com/PlOCnjFdcK— MGR NagaRaj_(எம்ஜிஆர் நாகராஜ்) (@MGRnagaraj2303) July 14, 2026
குறிப்பாக, அங்கிருந்த குழந்தைகள் அவரிடம் மிகவும் பாசமாகப் பேச, அவரும் முகத்தில் புன்னகையோடு அந்தக் குழந்தைகளிடம் கனிவாகப் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
”ஆளுங்கட்சி முதலமைச்சரின் கார் வேகமாகக் கடந்து சென்றதால் ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது, ஆனால் எங்களது எடப்பாடியாரோ காரை நிறுத்தி இறங்கி வந்து குழந்தைகளிடம் கனிவோடு பேசுகிறார்!”
என்ற ஒப்பீட்டு வாசகங்களுடன் இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டு, அதிமுகவினர் சோசியல் மீடியாவில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
