கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் கடுமையான வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ விரும்பும் பலருக்கு இந்த செய்தி ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது.

மேலும் 33 வயதான ஒரு மார்க்கெட்டிங் நிபுணர், ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டியிருந்த தனது முழுநேர கார்ப்பரேட் வேலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தைரியமாக உதறித்தள்ளியுள்ளார். அதன் பிறகு, அவர் சொந்தமாக ஒரு மார்க்கெட்டிங் சேவை வணிகத்தைத் தொடங்கி, தற்போது வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ. 1.8 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.

இதனால் 9-5 என்ற அலுவலக நேரக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் இல்லாத இந்த சுதந்திரமான வாழ்க்கையை, அவர் பணத்தை விடவும் தனது “வாழ்க்கையின் ஆகச்சிறந்த வெற்றி” என்று மகிழ்ச்சியுடன் ரெடிட் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது மழைக்காலத்தில் தனது கிராமத்து வீட்டிலிருந்து கொண்டே நிம்மதியாக வேலை செய்யும் அவர், வார நாட்களில் கூட தனது மகளை கடற்கரைக்கு அழைத்துச் செல்வது போன்ற எளிய மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும், இந்தத் தொழிலை நிலைநிறுத்துவதிலும் ஆரம்பத்தில் சில சவால்களைச் சந்தித்தாலும், விடாமுயற்சியால் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கார்ப்பரேட் வேலையை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு அவர் மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

முதலாவதாக, போதிய சேமிப்பு அல்லது பேக்கப் பிளான் இல்லாமல் வேலையை விடக் கூடாது; இரண்டாவதாக, ஆரம்பத்தில் பெரிய வாடிக்கையாளர்களைத் தேடி அலையாமல் சிறிய வாடிக்கையாளர்கள் மூலம் வணிக அமைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்; மூன்றாவதாக, வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால பலன்களைத் தரும் தெளிவான வேலைத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று தனது அனுபவப் பாடங்களைப் பகிர்ந்துள்ளார்.