இந்தியாவின் மிகவும் எளிதாக நடந்து செல்லக்கூடிய நகரமாக சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரம் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு சமூக ஊடகப் பதிவர் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், நடைபாதைகளில் வாகனங்கள் புகுவதும் பெரும் பிரச்னையாக இருக்கும் நிலையில், கேங்டாக்கில் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்ட தொடர்ச்சியான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

“>

மேலும், இங்கு தேவையின்றி ஹாரன் அடிப்பவர்களுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படுவதால், ஒலி மாசு இல்லாத அமைதியான சூழல் நிலவுகிறது. இதனுடன், அங்குள்ள இதமான தட்பவெப்ப நிலையும் மக்கள் சோர்வின்றி நீண்ட தூரம் நடப்பதற்கு உகந்ததாக உள்ளது.

இந்த நகரத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்வது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது; இங்கு பெண்களுக்கு எதிரான அநாகரிகமான பார்வைகளோ அல்லது தொல்லைகளோ இல்லை எனப் பதிவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது வாகன ஓட்டிகள் தாமாகவே முன்வந்து வாகனங்களை நிறுத்தி வழிவிடும் நற்பண்பையும் அங்குள்ள மக்கள் கொண்டுள்ளனர். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்த பலரும் கேங்டாக்கின் இந்த அமைதியான மற்றும் தூய்மையான சூழலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

அதே வேளையில், அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இமாச்சலப் பிரதேசம் அல்லது உத்தரகாண்ட் போன்ற பிற மலைப் பிரதேசங்களைப் போல கேங்டாக்கின் அமைதியும் அழகும் கெட்டுவிடக் கூடாது என்ற கவலையையும் இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர்.