உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாற்றுச் சான்றிதழ்  வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பெற்றோர் ஒருவரை பெண் தலைமை ஆசிரியை செருப்பால்  சரமாரியாக அடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு  ஆரம்பப் பள்ளிக்கு, அனுஜ் என்ற நபர் தனது குழந்தையின் டிசி-யை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியை, சான்றிதழ் வழங்க வேண்டுமானால் குழந்தையின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையை நேரில் அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு அனுஜ், தான் ஏற்கனவே ஆதார் அட்டையைச் சமர்ப்பித்துவிட்டதாகக் கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தின் போது, அனுஜ் தனது மொபைல் போனில் ஆசிரியை பேசுவதை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை, அவரது மொபைலைப் பறித்து தரையில் வீசியுள்ளார். கீழே விழுந்த மொபைலை எடுக்க முற்பட்டபோது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆசிரியை நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த ஆசிரியை, அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே தனது காலணியைக் கழற்றி அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.

இந்த 34 வினாடி வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதன்மைக் கல்வி அதிகாரி கம்லேந்திர குஷ்வாகா கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையம் சென்றுள்ளதாகவும், வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.