மத்தியப்பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், நபர் ஒருவர் திடீரென வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலியைத் தூக்கி எறிந்து தளபாடங்களைச் சேதப்படுத்தியுள்ளார். அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியையிடம் தவறாக நடந்துகொண்ட அந்த நபர், பள்ளியின் அனைத்து ஊழியர்களும் தன் முன்னால் வந்து நிற்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், அவரைத் தடுக்க முயன்ற ஆசிரியையின் வாகனத்தை அடித்து நொறுக்கிவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் இந்தச் சம்பவத்தால் பயந்து நடுங்கிய நிலையில், இதர பள்ளி ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

“>

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியையையும் மாணவர்களையும் அச்சுறுத்தி, பொதுச் சொத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த நபரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிபதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பள்ளிகளுக்குள், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.