உக்ரைனின் ஜப்போரிஷியா நகரில் உள்ள ஒரு உள்விளையாட்டு நீச்சல் குளத்தில், பொதுமக்கள் நீந்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரஷ்ய ஏவுகணை ஒன்று அதன் கூரையைத் துளைத்துக் கொண்டு நேரடியாக உள்ளே விழுந்து தாக்கியுள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் பதறவைக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏவுகணை தாக்கிய அந்த கோரமான நொடியில், கட்டிடத்தின் கூரையில் ஒரு பெரிய துளை ஏற்பட்டு, அதன் வழியாக சூரிய ஒளி உள்ளே ஊடுருவுவதையும், கட்டிடம் முழுவதும் கரும்புகையும் தூசியும் சூழ்வதையும் அந்த வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.

“>

இந்த பயங்கரமான தாக்குதலின் போது, நீச்சல் குளத்தின் கூரையிலிருந்து சிமெண்ட் துண்டுகள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் இடிபாடுகள் நீச்சல் குளத்தைச் சுற்றிலும் சிதறி விழுந்தன. எதிர்பாராத இந்த சத்தத்தாலும் அதிர்ச்சியாலும் உறைந்துபோன பொதுமக்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் குளத்திலிருந்து அங்கும் இங்கும் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக நீச்சல் வீரர்கள் உயிர் தப்பிய நிலையில், இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரின் கொடூர முகத்தை இந்த வீடியோ மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.