கார்ப்பரேட் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த 33 வயது பெண் ஒருவர், திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு உணவகத்தில் வெயிட்டராக மாறிய வினோதமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ‘சரமே கார்னிஷ்’ என்ற அந்தப் பெண், கார்ப்பரேட் வேலை தந்த கடுமையான மன அழுத்தத்தால் கடந்த ஆறு மாதங்களாக ‘ஐபிஎஸ்’ என்னும் தீவிர வயிற்றுப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதற்காகப் பல மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தும் குணமாகாத நிலையில், அந்தப் பதவியான வேலையை விட்டு விலகிய உடனேயே அவரது உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தும் முற்றிலும் குணமாகியுள்ளன.

“>

தற்போது ஹோட்டலில் தரையைத் துடைத்துக்கொண்டே புன்னகையுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்துள்ள அவர், “ஆரோக்கியமே செல்வம்” என்றும், நிம்மதியான வாழ்விற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் இந்த வேலையைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த முடிவை ஒட்டி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமே எழுந்துள்ளது. பல நெட்டிசன்கள் இவருடைய தைரியத்தைப் பாராட்டியதோடு, “ஆரோக்கியமும் மகிழ்ச்சியும்தான் முக்கியமே தவிர, வேலையின் பெயர் முக்கியமல்ல” என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் இதற்கு மாற்றுக்கருத்தையும் முன்வைத்துள்ளனர். குறைவான ஊதியம் கிடைக்கும் வெயிட்டர் வேலை நீண்ட காலத்திற்குப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பானது அல்ல என்றும், வாடிக்கையாளர்களைக் கையாளும் இதுபோன்ற எளிய வேலைகளிலும் கூடப் பணிப் பாதுகாப்பின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பல சவால்கள் நிறைந்துள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.