விப்ரோ நிறுவனத்தில் சுமார் ஐந்தரை ஆண்டுகள் பணியாற்றிய டெல்லியைச் சேர்ந்த அனுக்ரிதி வித்யார்த்தி என்ற பெண், தான் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட பின் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விப்ரோவின் ‘ஏஐ சொல்யூஷன்ஸ்’ பிரிவில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த இவரிடம், கடந்த ஜூன் 29 அன்று நடந்த ஒரு சாதாரண ஆலோசனைக் கூட்டத்தின் போது, அவரது பணி தற்போது தேவையில்லை எனக் கூறி நிறுவனத்தை விட்டு விலகுமாறு மேலாளரும் மனிதவள அதிகாரியும் தெரிவித்துள்ளனர்.

“>

இந்தத் திடீர் மாற்றத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபத்தையோ அல்லது நிறுவனத்தின் மீது பழியையோ சுமத்தாமல், மிகவும் யதார்த்தமாகவும் நேர்மையாகவும் தனது உணர்வுகளை ஒரு வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அனுக்ரிதி, “நான் இந்த வேலையை நானாக ஒருபோதும் விட்டிருக்க மாட்டேன், எனவே இது கடவுள் எனக்குக் கொடுத்த ஒரு அறிகுறியாக இருக்கலாம்” என்று இந்த இக்கட்டான சூழ்நிலையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஒவ்வொரு மாதமும் வழக்கமாக வரும் நிலையான வருமானத்தை இழப்பது மற்றும் அதனால் ஏற்படும் நிதி ஸ்திரமின்மை குறித்த தனது உண்மையான அச்சத்தையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் வேலை இழப்பால் ஏற்படும் வாழ்வின் இத்தகைய பெரிய மாற்றத்தை அவர் கையாண்ட விதம் இணையவாசிகளின் நெஞ்சைத் தொட்டுள்ளதுடன், கார்ப்பரேட் உலகில் இதேபோன்ற பணிநீக்கங்களை எதிர்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு ஆதரவாகவும், புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஊக்கமளித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.