இ-ரிக்‌ஷா மற்றும் மின்சார வாகனங்களைச் சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே, மொபைல் ஆப் மூலம் யாரோ நிறுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘BAT-BMS’ எனப்படும் சீன நிறுவனத்தின் பேட்டரி கண்காணிப்பு ஆப்ஸை தவறாகப் பயன்படுத்தி, ப்ளூடூத் மூலம் இந்த வாகனங்களைச் சிலர் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது. ஒருவரின் பொழுதுபோக்கிற்காக மற்றவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பது மட்டுமின்றி, நடுரோட்டில் வாகனம் நிற்பதால் பெரும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆப் உண்மையில் ஹேக்கிங் செய்வதற்கானது அல்ல; மாறாக பேட்டரியின் ஆரோக்கியம் மற்றும் சார்ஜ் அளவை கண்காணிக்க உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். ஆனால், சில மலிவான விலை கொண்ட மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி மேலாண்மை அமைப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால், ப்ளூடூத் இணைப்பு பாதுகாப்பற்றதாக உள்ளது.

“>

 

இதனால் அருகிலுள்ளவர்கள் இந்த ஆப்ஸைப் பயன்படுத்தி வாகனத்தின் பேட்டரி இணைப்பைத் துண்டிக்க முடிகிறது. இது தொழில்நுட்பக் குறைபாடு என்று தெரிந்தும், இதைப் பொறுப்பற்ற முறையில் விளையாட்டிற்காகப் பயன்படுத்துவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, வாகனப் பயனர்கள் தங்கள் பேட்டரி அமைப்புகளில் சரியான பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.