மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லோகாகாட் கோட்டையில், கேதன் அகர்வால் என்ற இளைஞர் கொல்லப்பட்ட  வழக்கில், தற்போது அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கேதனின் வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது கள்ளக்காதலன் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும், கொலை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஒரு கஃபேவில் நெருக்கமாக இருக்கும் ரகசிய காதல் வீடியோ தற்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் எடுக்கப்பட்ட இந்த  வீடியோவில், சியா தனது காதலன் சேத்தனின் கையைப் பிடித்துக் கொண்டு அணைத்தபடி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கேதனுடன் சியாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும், அவர் சேத்தனுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார் என்ற கேதனின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை இந்த வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, சியாவின் தாய் பூஜா கோயல் ஊடகங்களிடம் பேசுகையில், “என் மகளுக்கும் சேத்தனுக்கும் எந்தக் கள்ளத்தொடர்பும் இல்லை, அவர்கள் வெறும் நண்பர்கள் தான். என் மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவளுக்குத் தூக்குத் தண்டனை கொடுங்கள்” என்று சவால் விடுத்திருந்தார். ஆனால், தற்போது இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சியாவின் குடும்பத்தினர் கருத்து எதுவும் கூற முடியாமல் மௌனமாகியுள்ளனர்.

கடந்த ஜூன் 18 அன்று, கேதன் தனது வருங்கால மனைவி சியாவை  அழைத்துக்கொண்டு லோகாகாட் கோட்டைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே, சியா கேதனின் தாய்க்கு போன் செய்து, கேதன் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். மீட்கப்பட்ட கேதன் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால், ஜூன் 21 அன்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கேதனின் தந்தை விஷால் தேவ்சந்த் அகர்வால், அந்த இடத்திலிருந்து ஒருவர் தற்செயலாகக் கால் தவறி விழ வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து போலீஸில் புகாரளித்தார்.

இதையடுத்தே சியா மற்றும் அவரது காதலன் சேத்தன் சௌத்ரியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் திட்டமிட்டு அவரை கொலை செய்தது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.