மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-552ல், பூராபாலி சந்திப்பு அருகே லலிதா தாகர் என்ற பள்ளி ஆசிரியை காலையில் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையோரம் மயங்கி விழுந்தார்.

மேலும் அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற சமூக ஆர்வலர் சூரஜ் தாகர் மற்றும் அவரது நண்பர் பவன் குர்ஜார் ஆகிய இரு இளைஞர்கள், ஆசிரியையின் கவலைக்கிடமான நிலையைப் பார்த்து சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அவருக்கு சிபிஆர் கொடுக்கத் தொடங்கினர். இவர்களின் தீவிர முயற்சியால் சில நிமிடங்களிலேயே அந்த ஆசிரியையின் சுவாசம் மீண்டும் திரும்பி, அவரது உடல்நிலை ஓரளவிற்கு முன்னேறியது.

“>

அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் உடனடியாக அவரைத் தங்களது வாகனத்தில் கைலாரஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவரை குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனால் அவசர காலங்களில் முதல் சில நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், இந்த இளைஞர்களின் சரியான நேரத்து சிபிஆர் முதலுதவிதான் ஆசிரியையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்றும் மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் ஆபத்தான அவசர காலங்களில் சிபிஆர் போன்ற அடிப்படை முதலுதவி அறிவை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.