உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில் உள்ள ஓராய் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் பெண் பயிற்சி காவலர் ஒருவர் சக ஆண் காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த கணினி எழுத்தராகப் பணிபுரிந்த காவலர் அரவிந்த் படேல் என்பவரைத் துறை ரீதியாக உடனடியாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  கடந்த புதன்கிழமை இரவு நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் அரவிந்த் படேல் தனது கணினியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு சாதாரண உடையில் வந்த பெண் பயிற்சி காவலர், நாற்காலியில் அமர்ந்திருந்த அரவிந்தை பின்னால் இருந்து திடீரென கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

 

இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த காவலர் அரவிந்த் படேல் உடனடியாக நாற்காலியை விட்டு எழுந்து, அந்த பெண் காவலரிடம் இருந்து விலகிச் செல்ல முயன்றார். இருப்பினும், அந்த பெண் பயிற்சி காவலர் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியதை அடுத்து, ஜாலவுன் மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு காவலர் அரவிந்த் படேல் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க நகர துணைப் பிரிவு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.