பணத்திற்காக எத்தகைய ஆபத்தான காரியங்களையும் செய்யத் தூண்டும் ‘பம்ப்.ஃபன்’ என்ற சோலானா பிளாக்செயின் இணையதளம், ‘GO’ என்ற பெயரில் தொடங்கியுள்ள புதிய மார்க்கெட் பிளேஸ் இணைய உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தளத்தில் எஸ்க்ரோ முறையில் கிரிப்டோ கரன்சிகளை லாக் செய்து, ஆபத்தான சவால்களை பயனர்கள் பதிவிடுகின்றனர். இதனைச் செய்து முடிப்பவர்களுக்குப் பணம் வழங்கப்படும். இந்த விபரீத விளையாட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அறிவு’ என்ற வாலிபர், 2,400 டாலர் (சுமார் ரூ. 2 லட்சம்) பணத்திற்காகத் தன் நெற்றியில் ‘$boutywork’ என்ற கிரிப்டோ காயின் பெயரை நிரந்தரமாகப் பச்சைக் குத்திக் கொண்டு (Tattoo), ஜூன் 6 அன்று அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

ஆனால், அந்த சவாலை பதிவிட்டவர் ‘Bountywork’ என்ற வார்த்தையில் ‘n’ என்ற எழுத்தை விட்டுவிட்டதால், ஸ்பெல்லிங் தவறு எனக் கூறி அறிவுக்குப் பணம் தர மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், “நான் டாஸ்க்கில் இருந்தபடியே தான் செய்தேன், என் வாழ்க்கை அடகு வைக்கப்பட்டுள்ளது” என ‘X’ தளத்தில் கதறியுள்ளார். இதைப் பார்த்த சில கிரிப்டோ முதலீட்டாளர்கள், அதே தவறான ஸ்பெல்லிங்கில் ‘BOUTYWORK’ என்ற புதிய காயினை உருவாக்கி, அறிவின் புகைப்படத்தையே லோகோவாக வைத்தனர். சில மணி நேரங்களிலேயே அந்த காயின் மதிப்பு 3 கோடி ரூபாயைத் தாண்டியதால், ராயல்டி தொகையாக அறிவுக்கு சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் கிடைத்து இந்த விவகாரம் சுமுகமாக முடிந்தது.

இருப்பினும், இந்த இணையதளத்தில் பதிவிடப்படும் மற்ற சவால்கள் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் மிகக் கொடூரமாக உள்ளன. இந்த ஆப் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஒரு பயனர் தற்கொலை செய்து கொள்ளும் சவாலுக்கு 5.7 கோடி ரூபாய் இனாமாக அறிவித்தது உலகளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பிரிட்டனில் கொலைக் குற்றவாளியான இந்திய வம்சாவளி நபர் விக்ரம் திக்வாவால் பாதிக்கப்பட்ட ஹென்றி நோவாக் என்பவரின் குடும்பத்தைக் கண்டுபிடித்து, அவர்களைப் பின்தொடர்ந்து, மிரட்டி, கட்டாய நேர்காணல் எடுத்து வீடியோ வெளியிட்டால் 20 லட்சம் ரூபாய் பரிசு என்றும் கொடூரமான டாஸ்க் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதான பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு கிரிப்டோ காயின் சின்னத்தை அணிந்து ஸ்கைடைவிங் செய்பவருக்கு 47 லட்சம் ரூபாய் சவால் விடுக்கப்பட்டுள்ளது. பணத்திற்காக உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய கொடூரமான மற்றும் சட்டவிரோதமான இணையதளத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதிலும் உள்ள நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.