தெற்கு டெல்லியின் மால்வியா நகர், ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே பி&பி’ விடுதியில் இன்று காலை 8:48 மணியளவில் ஏற்பட்ட படுபயங்கர தீ விபத்தில், இதுவரை 21 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அடித்தளத்தில் உள்ள லெமன் கிரீன் உணவகத்தில் பற்றிய தீ, 5 மாடிகளைக் கொண்ட தங்கும் விடுதி முழுவதும் பரவியதில், வெளியேற ஒரே ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்ததால் மக்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அப்போது, கட்டிடத்தின் மேல் தளத்தில் தீப்பிழம்புகளுக்கு நடுவே சிக்கிய இரு பெண்கள், உயிர் பிழைப்பதற்காக ஜன்னல் வழியே அடுத்தடுத்து கீழே குதிக்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழே உள்ளூர்வாசிகள் பிடித்திருந்த தார்ப்பாயில் விழுந்த அவர்களில் ஒரு பெண், அதிசயமாக எழுந்து நின்று பின் மீண்டும் சுருண்டு விழுந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

“>

 

அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த வெளிநாட்டு நோயாளிகளின் உறவினர்கள் தங்கியிருந்த இந்த விடுதியில், தீயணைப்பு படை வர ஒரு மணி நேரம் தாமதமானதாகக் கூறி மக்கள் கொந்தளித்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் 40-க்கும் மேற்பட்டோரை மீட்டு எய்ம்ஸ் மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.