நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். முல்லாப்பூரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர்-2 ஆட்டத்தில், வெறும் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த அதிரடியின் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 72 சிக்சர்களைப் பறக்கவிட்டு, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தொடரில் 70-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற அசுர உலக சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்த இடதுகை பேட்ஸ்மேனின் கிரிக்கெட் சாதனையைக் கண்டு பலரும் வியந்தாலும், அவர்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதேபோல் ஜொலிப்பாரா என்ற கவலையையும், விவாதங்களையும் கிரிக்கெட் விமர்சகர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை நாயகன் கபில்தேவ், இந்த இளம் வீரரின் எதிர்காலம் குறித்து தனது தந்தை வழியிலான முக்கிய அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “வைபவ் சூர்யவன்ஷி ஒரு அசாத்திய திறமைசாலி  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் அவர் இன்னும் மிகவும் சிறிய வயதுடையவர்.

தற்போது அவரது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது, ஆனால் அவர் வளர வளர வாழ்க்கைப் பள்ளியின் பாடங்களையும், அனுபவங்களையும் கற்கும்போது பல விஷயங்கள் மாறும். அவருக்கு இன்னும் நீண்ட தூர கிரிக்கெட் பயணம் பாக்கி இருப்பதால், நாம் அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். இப்போதே அவர் மீது அதிக அழுத்தங்களை ஏற்றாமல், நிதானமாக வளர அனுமதிக்க வேண்டும் என்று கபில்தேவ் மிகவும் முதிர்ச்சியானதொரு ஆலோசனையை வழங்கியுள்ளார்.