சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங் ஏரியா) சிறுவன் ஒருவன் வழக்கம்போல தனியாக உலாத்திக் கொண்டிருக்கிறான்.

சுற்றிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த அமைதியான சூழலில், திடீரென எங்கிருந்தோ வந்த தெருநாய்களின் கூட்டம் ஒன்று அந்தச் சிறுவனை நோக்கி பாய்ந்தது. ஆபத்தை உணர்ந்து அந்தச் சிறுவன் அலறியடித்தபடி தப்பியோட முயன்றான். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த வெறிநாய்க் கூட்டம் சிறுவனை கீழே தள்ளி, கொடூரமாக கடித்துக் குதறத் தொடங்கியது.

சுமார் 70 வினாடிகள் நீடிக்கும் இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோவில், தரையில் விழுந்த சிறுவன் நாய்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறான். ஆனால், வெறிபிடித்த நாய்கள் அவனை விடுவதாக இல்லை. சிறுவனின் மரண ஓலத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு உடனே ஓடி வந்தனர்.

அவர்கள் நாய்களை கல் மற்றும் குச்சிகளால் அதட்டி விரட்டியடித்ததால், சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கானோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘குழந்தைகளை வெளியில் தனியாக அனுப்பாதீர்கள்’ என்றும், ‘தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தையும் அச்சத்தையும் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகிறார்கள்.