உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில், ஒருதலைக் காதல் ஆத்திரத்தில் 17 வயது சிறுமி ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, அவரது ரகசிய உறுப்புகளைப் பற்களால் கடித்துக் குதறிய வாலிபரின் வெறிச்செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி டெல்லியில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மே 3-ஆம் தேதி தனது உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த மே 11-ஆம் தேதி இரவு 11.15 மணியளவில், திருமணச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்து சிறுமி மட்டும் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அதுல் என்ற வாலிபர், சிறுமியின் வாயைப் பொத்தி, வலுக்கட்டாயமாக ஒரு பாழடைந்த இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்த அந்த வாலிபர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்குச் சிறுமி மறுப்பு தெரிவித்ததோடு, “நீ எனக்கு அண்ணன் முறை வேண்டும், உன்னை நான் அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன், உன்னைத் திருமணம் செய்ய முடியாது” என்று விளக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதுல், சிறுமியை அடித்துத் துவைத்து அரைகுறை உயிராக்கியுள்ளார்.

அதன் பின்னரும் சிறுமி திருமணத்திற்குச் சம்மதிக்காததால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த வாலிபர், சிறுமியின் இரண்டு ரகசிய உறுப்புகளையும் தனது பற்களால் கடித்துக் கொடூரமாகக் குதறியுள்ளார். இதில் உடலில் இருந்து ரத்தம் கொட்டி, கடுமையான வலியால் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

நள்ளிரவில் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, தனியாகக் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டிற்கு வந்து தாயிடம் அழுதுள்ளார். பதறிப்போன அவரது தாய், மகளை அழைத்துக் கொண்டு பிரதாப்நகர் மற்றும் கோதாவான் ஆகிய காவல் நிலையங்களுக்கு  இரவு முழுவதும் அலைந்துள்ளார். ஆனால், போலீசார் அவரது புகாரைப் பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அவர் ப அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் இது போலீஸ் கேஸ் என்று காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்த பின்னரே போலீசார் அங்கு வந்துள்ளனர்.

இதுகுறித்துச் சிறுமியின் தாய் கூறுகையில், “நாங்கள் படிக்காதவர்கள் என்பதால், வந்து விசாரணை நடத்திய போலீசார் தாங்களாகவே ஒரு மனுவை எழுதிக் கொண்டனர். ஆனால், கொடூரமான இந்த பாலியல் வன்கொடுமையை மறைத்து, வெறும் சாதாரண அடிதடி பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் குற்றவாளி மீது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.