ரயில்வே ஊழியர்கள் சிலர் 75 வயது மூதாட்டியிடம் அநாகரீகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பக்கமான ‘எக்ஸ்’ தளத்தில் ரியா கோஷ் என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ரயில் பெட்டி ஒன்றில் அமர்ந்திருக்கும் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், ரயில்வே ஊழியர்களிடம் கைகூப்பி தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த மூதாட்டி ரயில்களில் சிறு சிறு பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தவர் எனத் தெரிகிறது.

வாக்குவாதத்தின் போது, அந்த ஊழியர்கள் மூதாட்டியை தள்ளியதோடு, ஒரு கட்டத்தில் அவரது சேலையை இழுத்து அராஜகத்தில் ஈடுபட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது ரயிலில் இருந்த பயணிகள் யாரும் அதனைத் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “பயம் தைரியத்தை வெல்லும்போது மனிதாபிமானம் மரணிக்கிறது” என இந்த வீடியோவை பதிவிட்டவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் ரயில்வே ஊழியர்களின் இந்த செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ உதவி மையம் (Railway Seva) இதற்குப் பதிலளித்துள்ளது. அதில், “இந்த சம்பவம் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொள்கிறோம். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். இந்த சம்பவம் நடந்த ரயில் மற்றும் பயண விவரங்களை அளிக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.