இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான சூர்யகுமார் யாதவ் – தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று (வியாழக்கிழமை) பெண் குழந்தை பிறந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் தேவிஷா ஷெட்டி ஆகியோருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் விளையாட்டு செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவிற்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 சீசனில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சற்று சறுக்கலைச் சந்தித்து வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் அவர் 195 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். களத்தில் ஃபார்ம் இன்றித் தவித்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைத்துள்ள இந்தச் சுபச் செய்தி அவருக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
Many, many congratulations to India’s T20 captain @surya_14kumar & his wife Devisha for being blessed with a baby girl today 👶 🌼 🌸 👍 👏 ❤️ 😍 💖
— Gaurav Gupta (@toi_gauravG) May 7, 2026
குழந்தை பிறப்பையொட்டி சூர்யகுமார் யாதவ் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக, வரும் மே 10-ஆம் தேதி ராய்ப்பூரில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்யாமல் மும்பையிலேயே தங்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9-ஆவது இடத்தில் தவித்து வரும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், அவரது வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்திற்காகப் பலரும் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்
