லென்ஸ்கார்ட் நிறுவன ஊழியர்கள் பொட்டு மற்றும் திலகம் அணிய தடை விதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஒரு நபர் அந்த நிறுவனத்தில் வாங்கிய சுமார் 12,000 ரூபாய் மதிப்பிலான கண்ணாடியை பொதுவெளியில் போட்டு உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடைகளுக்கு வெளியே நின்றபடி தனது எதிர்ப்பைப் பதிவு செய்த அந்த நபர், ஹிந்து மத அடையாளங்களுக்கு எதிராக ஏன் இந்த வெறுப்பு காட்டப்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், அவரது செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

“>

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்களில் பலர், ஏற்கனவே பணம் கொடுத்து வாங்கிய பொருளை உடைப்பது அந்த நிறுவனத்திற்கு எந்த இழப்பையும் தராது என்றும், மாறாக இது முட்டாள்தனமான செயல் என்றும் விமர்சித்துள்ளனர். மேலும் சிலர், இது போன்ற விளம்பர நோக்கம் கொண்ட போராட்டங்களுக்குப் பதில், அந்தக் கண்ணாடியை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லென்ஸ்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அத்தகைய தடைகளை விதிக்கவில்லை என்று கூறப்பட்டாலும், மத அடையாளங்கள் மற்றும் பணியிடக் கட்டுப்பாடு தொடர்பான விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.