உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரீல்ஸ் மோகத்தால் ஒரு காதல் கதை சோகத்தில் முடிந்துள்ளது. இரம் மற்றும் அவரது நண்பர் ஹாஷிம் ஆகிய இருவரும் அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காகத் தங்களது பயணத்தை மொபைல் கேமராவில் ‘ரீல்ஸ்’ ஆகப் பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

காதலியை ஒரு பிரேமில் கொண்டு வர ஹாஷிம் முயன்றபோது, பைக்கின் வேகம் கட்டுப்பாட்டை மீறியது. அடுத்த சில நொடிகளில் பைக் பயங்கர வேகத்தில் சாலையோர டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்தக் கோர விபத்தில் இரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஹாஷிம் தற்போது உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நொடிகள் வீடியோ எடுத்துப் புகழடைய ஆசைப்பட்டு, ஒரு முழு வாழ்க்கையையே தொலைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“வாகனங்களை ஓட்டும்போது வீடியோ எடுப்பது டிரெண்ட் அல்ல, அது மரணத்தின் வாசல்” எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் எடுக்க வேண்டாம் எனப் பலரும் சமூக அக்கறையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.