ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் அதன் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலகையே அதிர வைத்துள்ளது.

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமே முடிவுக்கு வரக்கூடும்” என்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், 47 ஆண்டுகால ஊழல் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரலாற்றுத் திருப்புமுனை இது எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5:30 மணிக்குள் (அமெரிக்க நேரப்படி செவ்வாய் இரவு 8 மணி) ஈரான் பணியவில்லை என்றால், அந்நாடு மீண்டும் மீள முடியாத அளவிற்குத் தகர்க்கப்படும் என அவர் மிரட்டியுள்ளார். அதேசமயம், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விவேகமான தலைவர்கள் உருவெடுக்க இது ஒரு நல்வாய்ப்பு என்றும், ஈரான் மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

“>

டிரம்பின் இந்தக் காலக்கெடுவிற்கு முன்பே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முதுகெலும்பான கார்க் தீவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதனால் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் கடற்படைத் திறன்கள் பெருமளவு பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், “தாக்குதல்கள் நிற்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று ஈரான் கறாராகக் கூறிவிட்டதுடன், சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோ (Aramco) நிறுவனம் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

டிரம்பின் கெடு முடிய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், ஈரான் சரணடையுமா அல்லது ஒரு பெரும் போர் வெடிக்குமா என்ற திக் திக் நிமிடங்கள் நீடிக்கின்றன.