மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கலைந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவதற்கு முன்பே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் சரமாரியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

ஈரானின் காஷான் நகரில் உள்ள யஹ்யாபாத் ரயில்வே பாலம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் வான்வழித் தாக்குதலில், இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத்தில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5:30 மணி வரை டிரம்ப் கெடு விதித்திருந்தாலும், அதற்கு முன்னதாகவே உள்கட்டமைப்புகள் சிதைக்கப்படுவது போரின் தீவிரத்தை உணர்த்துகிறது.

“>

இந்தத் தாக்குதலின் மிக முக்கியமான பகுதியாக, ஈரானின் முதுகெலும்பாகக் கருதப்படும் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா குண்டுமழை பொழிந்துள்ளது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி இங்கிருந்தே நடைபெறுவதால், இந்தத் தாக்குதல் அந்நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு முடக்கும் எனக் கருதப்படுகிறது.

“>

இதற்குப் பதிலடியாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. “எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு, இனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எரிசக்தி மையங்கள் மீது பிராந்தியத்தைத் தாண்டித் தாக்குதல் நடத்துவோம்” என ஈரான் பகிரங்கமாகச் சவால் விட்டுள்ளது.

இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.