பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது அதைப் புறக்கணித்துவிட்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்குச் செல்லும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (PCB) மொஹ்சின் நக்வி எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நடைபெறுகின்றன. இதனால் பிஎஸ்எல் தொடரில் விளையாட வேண்டிய முன்னணி சர்வதேச வீரர்கள், ஐபிஎல் அணிகளுடன் இணைந்து வருகின்றனர். ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முசாரபானி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை விட்டு விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய முடிவு செய்து பிஎஸ்எல் ஒப்பந்தத்தை முறித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி கூறியதாவது, “பிஎஸ்எல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துவிட்டு, பாதியிலேயே வெளியேறிய 2-3 வீரர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம். ஐபிஎல் தொடருடன் மோதல் ஏற்படுவதால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. உலகம் முழுவதும் திறமையான வீரர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். ஐபிஎல் தொடர் இருந்தபோதிலும் பல சர்வதேச வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாட வந்துள்ளனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், இந்த ஆண்டு பிஎஸ்எல் தொடர் ரசிகர்கள் இன்றி (வெற்று மைதானத்தில்) நடத்தப்படும் என நக்வி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஆறு நகரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள், தற்போது லாகூர் மற்றும் கராச்சி ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே நடைபெறும். மேலும், இந்த ஆண்டின் பிஎஸ்எல் தொடக்க விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதுகின்றன. இந்த முறை 6 அணிகளுக்குப் பதிலாக 8 அணிகள் பங்கேற்கின்றன. அதே சமயம், இந்தியாவில் ஐபிஎல் தொடர் மார்ச் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.