சமூக வலைதளங்களில் எத்தனையோ ஸ்டண்ட் வீடியோக்கள் வந்தாலும், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ பார்ப்பவர்களின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்துள்ளது. ஒரு பெண், மிகக் குறுகலான மலைப் பாதையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சிதான் அது. ஒரு பக்கம் விண்ணைத் தொடும் மலை உச்சி, மறுபக்கம் கண்ணுக்கெட்டாத ஆழமான அதலபாதாளம். உயிரைப் பணயம் வைத்து அவர் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு நாய் குறுக்கே வர, அதற்கு வழிவிட முயன்றார். அந்த நொடியில் நிலைதடுமாறிய சைக்கிள், அப்படியே அதலபாதாளத்தை நோக்கிச் சரியத் தொடங்கியது.

​பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அலறுவதற்குள், அந்தப் பெண் பாதாளத்திற்குள் விழப் பார்த்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக நூலிழையில் அவர் பிழைத்துக் கொண்டார். விதி அவருக்குச் சாதகமாக இருந்ததால், பெரிய விபத்தில் இருந்து அவர் மயிரிழையில் தப்பினார். @TansuYegen என்பவரால் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட இந்த 3 நிமிட வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மிரண்டு போயுள்ளனர். “லைக்ஸ் வாங்கவும் கன்டென்ட் எடுக்கவும் இப்படி உயிராபத்தான காரியங்களில் ஈடுபட வேண்டுமா?” என்று நெட்டிசன்கள் அந்தப் பெண்ணைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.