புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது, அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை ரசிகர் ஒருவர் கட்டிப்பிடிக்க முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், மெஸ்ஸி நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இண்டர் மியாமி மற்றும் இண்டிபெண்டியன்ட் டெல் வாலே அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியின் 88-ஆவது நிமிடத்தில், மெஸ்ஸி தனது சக வீரருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர், மெஸ்ஸியை பின்னால் இருந்து கட்டிப்பிடிக்க முயன்றார்.

உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரி, அந்த ரசிகரை மெஸ்ஸியிடமிருந்து பிரிக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மெஸ்ஸி தரையில் விழுந்து உருண்டார். எனினும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அந்த ரசிகர் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இண்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் சாண்டியாகோ மோரலஸ் முதல் கோல் அடித்தார். பின்னர், 70-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த அபார கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. முன்னதாக, மெஸ்ஸிக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற வேண்டிய இப்போட்டி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.