டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் போது சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சௌரப், சித்தார்த் மற்றும் அர்பாஸ் ஆகியோரை டெல்லி போலீசார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

ஆனால், ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்திற்குச் சென்று கைது நடவடிக்கை எடுக்கும்போது உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை டெல்லி போலீசார் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சிவில் உடையில் வந்து காங்கிரஸ் நிர்வாகிகளைக் கைது செய்து, விடுதியின் சிசிடிவி ஆதாரங்களை எடுத்துச் சென்ற டெல்லி போலீசார் மீது சிம்லா போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.
<a href="http://

“>

இந்த விவகாரம் தொடர்பாக நள்ளிரவில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், கைதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல 18 மணி நேர டிரான்சிட் ரிமாண்ட் வழங்கப்பட்டது. நீதிமன்ற அனுமதி கிடைத்த பிறகும், சிம்லா எல்லையில் டெல்லி போலீசாரின் வாகனங்களை இமாச்சலப் போலீசார் மறித்ததால் இரு தரப்பினரிடையே நடுத்தெருவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் ஆதாரங்களின் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு டெல்லி போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய இமாச்சல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, டெல்லி போலீசாரின் செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்றார்.

அதே சமயம், மாநில அரசு குற்றவாளிகளுக்குப் புகலிடம் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.