ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டம் பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள இந்த 90 பக்க சட்டத் தொகுப்பு, மதத் தலைவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதோடு, இஸ்லாமிய வேதங்களின் பழைய நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்துகிறது.

குறிப்பாக, பெண்கள் தங்கள் கணவன் அல்லது எஜமானர்களின் அனுமதி இன்றி உறவினர்களைச் சந்திக்கச் சென்றால் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், கணவன் தனது மனைவியை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சட்டம் கூறுகிறது. இது பெண்களை அடிமைகளுக்கு நிகராக நடத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்தச் சட்டத்தின்படி, ஒரு பெண் தனது கணவனால் தாக்கப்பட்டால், அவர் நீதிபதியிடம் தனது காயங்களை நிரூபிக்க வேண்டும். ஆனால், அப்படி நிரூபிக்கும்போதும் அவர் முழுமையாக உடல் மறைக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

ஒருவேளை கணவன் கடுமையாகத் தாக்கியது நிரூபணமானாலும் கூட, அவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், கடுமையான குற்றங்களுக்கான தண்டனைகளைச் சிறைத்துறைக்கு பதிலாக மத குருமார்களே வழங்குவார்கள் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.

சமூகத்தை அடுக்குகளாகப் பிரித்து, பெண்களுக்கு எதிரான வன்முறையைச் சட்டப்பூர்வமாக்கும் இந்த நடைமுறை ஆப்கானிஸ்தானில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.