பெரு நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கி வருகிறது. ‘ஜீசஸ்’ என்ற சிறுவன், உயிரிழந்த தனது தாயின் கல்லறைக்கு முன்னால் நின்று, தனது பள்ளி ரேங்க் கார்டை (Report Card) காட்டும் காட்சி காண்போரை நெகிழச் செய்கிறது. தான் நன்றாகப் படிப்பேன் என்று தன் தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அந்தச் சிறுவன், அம்மா தாராளமாகப் பாராட்டுவார் என்ற நம்பிக்கையில் அந்தப் மதிப்பெண் பட்டியலைக் காட்டிவிட்டு, பின் தேம்பித் தேம்பி அழுகிறான். 2005-ல் தாயை இழந்தாலும், இன்றும் அந்தச் சிறுவன் அடிக்கடி கல்லறைக்குச் சென்று தனது படிப்பைப் பற்றியும், மதிப்பெண்களைப் பற்றியும் தாயிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளான்.

​இந்த உருக்கமான வீடியோவின் இறுதியில், ஒரு வழிப்போக்கர் அந்தச் சிறுவனின் துயரத்தைப் புரிந்து கொண்டு, அவனது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறி அழைத்துச் செல்கிறார். தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு மரணத்திற்கு அப்பாலும் தொடரும் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்துகிறது. “அம்மா எங்கே இருந்தாலும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்” என்ற அந்தச் சிறுவனின் அசைக்க முடியாத நம்பிக்கை, மனித நேயத்தின் மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.