டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தை டிவி-க்கள் மீது காட்டி வருகின்றனர். கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடந்த போட்டியில், இந்தியா நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் 114 ரன்களுக்கு சுருண்டது. இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் ரசிகர்கள், ஆட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே தெருக்களில் இறங்கி டிவி-க்களை போட்டு உடைக்கும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

​வைரலாகும் ஒரு வீடியோவில், ஆவேசமடைந்த ரசிகர் ஒருவர் செங்கல்லை எடுத்து டிவியின் நடுவிலேயே வீசி எறிய, மற்றவர்கள் சேர்ந்து அந்த டிவியை அடித்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தியாவிடம் தோற்கும் போதெல்லாம் பாகிஸ்தானில் இப்படி டிவி-க்களை உடைப்பது ஒரு சடங்கு போல மாறிவிட்ட நிலையில், இந்த முறையும் அது தொடர்வது சமூக வலைதளங்களில் பெரிய கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் இந்திய ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்க, மறுபக்கம் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்திலும் ஆத்திரத்திலும் தங்கள் வீட்டு உபயோகப் பொருட்களைச் சேதப்படுத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.