மும்பை போரிவலி பகுதியில் சாலையோரம் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் 82 வயது முதியவர் ஒருவரின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மை குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

 

ஓய்வுக்காலத்தை வீட்டிலேயே கழிக்க விரும்பாமல் மூன்று பெண்களுடன் இணைந்து தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் அவர் அந்தத் தொழிலில் கிடைக்கும் லாபத்தை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து வழங்கி வருகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு இத்தொழிலைத் தொடங்கிய அவர் தமக்குக் கிடைக்கும் வருமானத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி உழைப்பவர்க்கு உரிய பங்கை நேர்மையாக அளிப்பதைத் தனது கொள்கையாகக் கொண்டுள்ளார்.

தமக்கு உதவி செய்ய முன்வந்த ஒருவரிடம் முதலில் பணத்தைப் பெற மறுத்த அவரது கண்ணியம் மற்றும் சுயமரியாதை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கடின உழைப்பும் பிறருக்குச் சமமான பலனை அளிக்கும் நற்பண்பும் கொண்ட இந்த முதியவரின் செயலை உண்மையான வெற்றி என இணையவாசிகள் வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர்.