அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் நெருக்கடி மிகுந்த நெடுஞ்சாலையில் துப்பாக்கிகளால் சுட்டு ரகளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

மார்கரெட் மெக்டெர்மாட் மேம்பாலத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு நடுவே, இரண்டு இளைஞர்கள் தங்களது வாகனங்களில் இருந்தபடி வானத்தை நோக்கித் தானியங்கி ரகத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டாக்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் அந்தோணி அசிவேடோ, ஜோஸ் சான்செஸ் மற்றும் ஆண்டர்சன் டெர்ஸ் லாரா ஆகியோரைக் கண்டறிந்தனர்.

இதில் லாரா என்பவர் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஒரு கார் தகராறில் குழந்தைகளுடன் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியது தொடர்பான விசாரணையும் அவர்கள் மீது முடுக்கிவிடப்பட்டுள்ளது.