உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், ஈ-ரிக்ஷா மீது மோதிய ஜீப் ஒன்று, விபத்தில் காயமடைந்த அதன் ஓட்டுநரை பானட்டில் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை பிலாஸ்பூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஜீப், எதிரே வந்த ஈ-ரிக்ஷா மீது மோதியதில் ஓட்டுநர் ஷப்பு என்பவர் படுகாயமடைந்தார்.

 

விபத்தை ஏற்படுத்திய ஜீப் ஓட்டுநர் மனப்ரீத் அங்கிருந்து தப்ப முயன்றபோது, காயமடைந்த ஷப்பு அதனைத் தடுக்க ஜீப்பின் முன்னால் நின்றுள்ளார். ஆனால், மனப்ரீத் ஜீப்பை நிறுத்தாமல் முன்னேற்றவே, ஷப்பு அதன் பானட்டில் தொற்றிக் கொண்டார். இரக்கமின்றி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர், ஷப்புவை பானட்டில் தொங்கவிட்டபடியே வட்டமடித்தும் சாலையோரமும் ஓட்டிச் சென்றுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சத்தமிட்டு விரட்டியதைத் தொடர்ந்து ஜீப் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜீப் ஓட்டுநரைத் தற்கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.