கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 41 வயது தீபக் என்பவர், பேருந்து பயணத்தின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் வெளியான ஒரு காணொளியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகப் பேருந்து நடத்துநர்களும் பயணிகளும் தங்கள் முகத்தில் அட்டைப்பெட்டிகளை அணிந்து நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சமூக வலைதளங்களில் முறையான விசாரணையின்றி ஒருவரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலும் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்த்தவே இந்த அட்டைப்பெட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

தீபக் தற்கொலை தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.